ஹங்கேரியில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இறுதி நாளான இன்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி ஏறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 19ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 11.45 மணிக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (25 வயது) ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். அவருடன் இந்தியாவின் டி.பி.மானு, கிஷோர் குமார் ஜெனா உள்பட 12 பேர் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
இந்த முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றினால், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.