சநாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு என தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த 4 மாநிலங்களில் தெலங்கானவைத் தவிர மற்ற 3 மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸும் ஆட்சியமைக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், சநாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு என தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: சநாதன தர்மத்தை அவமதிப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த தலைமைத்துவத்துக்கு மற்றுமொரு சான்று எனப் பதிவிட்டுள்ளார்.