தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்குமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று (டிசம்பர் 10) தொடங்கிய நிலையில், முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நாளை (டிசம்பர் 12) 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க: மேற்கிந்தியத் தீவுகளின் ஒப்பந்தத்தை நிராகரித்த வீரர்கள்
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்குமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என விராட் கோலி நினைப்பார் என என்னால் உறுதியாக கூறமுடியும். அவர் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு அவர் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற நினைத்தால், விராட் கோலி மிகப் பெரிய இன்னிங்ஸை விளையாடுவார். போட்டி எங்கு நடைபெற்றாலும் விராட் கோலி சிறப்பாக விளையாடக் கூடியவர். அவருக்கு தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் வெற்றிகரமாக விளையாடிய அனுபவம் போதுமான அளவுக்கு இருக்கிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் குறித்த அனுபவத்தை அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வழங்கி அவர்கள் சிறப்பாக விளையாட அவர் யோசனை கூறுவார் என்றார்.