ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.20 கோடிக்கு ஏலமெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 19) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அண்மையில் உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ. 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிக்க: ஐபிஎல் ஏலம்: பாட் கம்மின்ஸ் சாதனையை முறியடித்த ஸ்டார்க்!
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 20 கோடிக்கு ஏலமெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இது உண்மையில் மிகப் பெரிய விலை. ரூ. 20 கோடிக்கு ஏலமெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், 20 கோடி ரூபாய் என்பது எதிர்பாராதத் தொகை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுக்கான புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் பாட் கம்மின்ஸை அதிகத் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர். பெங்களூரு அணியும் நீண்ட காலமாக தங்களுக்கான கேப்டனைத் தேடி வந்தது. பாட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள் என்றார்.