தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜுக்குப் பதிலாக மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 26 முதல் தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் டெஸ்ட் தொடரிலிந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். இதனை பிசிசிஐயும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ருதுராஜுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளார். அவருக்குப் பதிலாக அபிமன்யு ஈஸ்வரனை தேர்வுக்குழு மாற்று வீரராக தேர்ந்தெடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜுக்குப் பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது அவர் இந்தியா ஏ அணியை வழிநடத்தி வருவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே அணியில் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.