மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த விவகாரத்தில் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த விவகாரத்தில் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் நான் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசியிருக்கிறேன். இதற்கு மேல் அந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களது சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னால் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வெல்வீர்களா எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் அனைவரும் வெல்வோம் என்றார்கள். வென்றும் காட்டினார்கள். எதிர்காலத்திலும் இதுபோன்ற சிறப்பான பங்களிப்பை வீரர், வீராங்கனைகள் வழங்க வேண்டும் என்றார்.