இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில், அண்மைக் காலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொது நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்பதைக் காண முடிந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு ஏற்பட்ட கார் விபத்து பயங்கரமானது. ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டு மொத்த உலகும் அதிர்ச்சியடைந்தது. அந்த விபத்திலிருந்து அவர் மெதுவாக குணமடைந்து மீண்டு வந்துள்ளார். அவர் முதலில் ஊன்று கோல் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார். பின்னர் சிறிய அளவில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். சிறிது கிரிக்கெட்டும் விளையாடினார். ரிஷப் பந்த்தின் இடத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டார். அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் கே.எல்.ராகுல் 452 ரன்கள் குவித்தார். வருகிற 2024 ஆம் ஆண்டு ரிஷப் பந்த்துக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றார்.