ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை!

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை!

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.

ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். ரிஷப் பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. 

படுகாயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிகக் குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, பிப்ரவரியில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் போன்றவற்றில் ரிஷப் பந்த் விளையாட மாட்டாா் எனத் தெரிகிறது.

மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோகிலாபென் மருத்துவமனையில் ரிஷப் பந்துக்கு வெள்ளிக்கிழமையன்று முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் சிகிச்சையினால் காயம் குணமான பிறகே வீடு திரும்புவார் ரிஷப் பந்த். வீட்டில் ஓய்வெடுத்த பிறகு பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அங்கும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படும். இறுதியாக, அகாதெமியில் அவருடைய உடற்தகுதி குறித்து பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகே ரிஷப் பந்தால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com