பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்டத்தை விலக்கிக் கொண்ட மல்யுத்த வீரர்கள்!

மல்யுத்த வீரர்கள் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு...
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்டத்தை விலக்கிக் கொண்ட மல்யுத்த வீரர்கள்!

மல்யுத்த வீரர்கள் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மூன்று நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் விலக்கிக் கொண்டுள்ளனா்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மல்யுத்த வீரா், வீராங்கனைகள் எழுதியிருந்த கடிதத்தில், பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா். மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் நிதி கையாடல், தகுதியற்ற பயிற்சியாளா்கள் மற்றும் ஊழியா்கள் நியமனம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அவா்கள் கூறியிருந்தனா்.

டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் புதன்கிழமை குற்றம்சாட்டினாா். பிரிஜ் பூஷணுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பூதாகரமாகி வரும் நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க நிா்வாக கவுன்சிலின் அவசரக் கூட்டம், சங்கத் தலைவா் பி.டி.உஷா தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஏழு உறுப்பினா்கள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

புகழ்பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வா் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானா்ஜி, இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவா் சகாதேவ் யாதவ், அலக் நந்தா அசோக் மற்றும் இரு வழக்குரைஞா்கள் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இக்குழு முழுமையான விசாரணை மேற்கொண்டு, நீதியை உறுதிசெய்யும் என்று பி.டி.உஷா உறுதியளித்துள்ளாா்.

இதையடுத்து பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், அன்ஷு மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா போன்ற மல்யுத்த வீரர்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை வியாழன் இரவு அவரது இல்லத்தில் சந்தித்து, இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கையைக் கோரினா். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. நேற்று மாலை ஏழு மணி முதல் ஐந்து மணி நேரத்துக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மூன்று நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் விலக்கிக் கொண்டுள்ளனா்.இத்தகவலை பஜ்ரங் புனியா தெரிவித்தார். 

பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஏழு உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதால் விசாரணை நடைபெறும் வரை பதவியிலிருந்து பிரிஜ் பூஷண் விலகியிருப்பார். விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பார் என அனுராத் தாக்குர் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் காரணமாக மல்யுத்த வீரர்களின் பாதுகாப்புக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பஜ்ரங் புனியா பேட்டியளித்தார். இந்த விசாரணை ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com