
தனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்.
35 வயது உமேஷ் யாதவ், இந்திய அணிக்காக 55 டெஸ்டுகள், 75 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
உமேஷ் யாதவ் தந்தை திலக், உடல்நலக்குறைவு காரணமாக நாகபுரியில் சிகிச்சை எடுத்து வந்தார். பிப்ரவரி 23 அன்று சிகிச்சை பலனின்றி திலக் காலமானார். தந்தைக்கான இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு 3-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு இந்திய அணியினருடன் உமேஷ் யாதவ் இணைந்துகொண்டார். முதல் இரு டெஸ்டுகளிலும் விளையாடாத உமேஷ் யாதவ், 3-வது டெஸ்டில் விளையாடி நன்குப் பந்துவீசினார்.
உமேஷ் யாதவின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கடந்த பிப். 27 அன்று கடிதம் எழுதினார் பிரதமர் மோடி. அதில், உமேஷ் யாதவின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவருடைய தந்தையின் பங்களிப்பையும் தியாகத்தையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தந்தை என்கிற பந்தம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிட்டு உமேஷ் யாதவின் தந்தையின் மறைவுக்குத் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் முடிந்த பிறகு பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் உமேஷ் யாதவ். என்னுடைய தந்தையின் மறைவுக்கு இரங்கற் செய்தி அனுப்பியதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இக்கடிதம் ஆறுதல் அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.