உலகக் கோப்பை நடைபெறும் கால அளவை கருத்தில் கொண்டு ஒரு அணியில் 15-க்கும் அதிகமான வீரர்களை இடம்பெற அனுமதித்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினாலும் அதன்பின் வெற்றிப்பாதைக்குத் திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் காயம் காரணமாக மேக்ஸ்வெல்லும், சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ள மிட்செல் மார்ஷும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற மாட்டார்கள் என்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை தனிநபரின் சாதனைகளுக்கான இடமல்ல: ஸ்ரேயாஸ் ஐயர்
இந்த நிலையில், உலகக் கோப்பை நடைபெறும் கால அளவை கருத்தில் கொண்டு ஒரு அணியில் 15-க்கும் அதிகமான வீரர்களை இடம்பெற அனுமதித்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமானால் இந்த உலகக் கோப்பை இரண்டு மாதங்கள் நடைபெறும் தொடர். நீங்கள் நியூசிலாந்து அணியின் நிலையில் இருப்பதை விரும்பமாட்டீர்கள். அவர்களது அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக அணியில் இல்லை. அதிர்ஷ்டவசமாக கேன் வில்லியம்சன் அவர்களது அணியில் இருக்கிறார். ஆனால், திடீரென அவர் விலகும் சூழல் ஏற்பட்டால் அது கிரிக்கெட் போட்டிக்கும் நல்லதல்ல, உலகக் கோப்பைக்கும் நல்லதல்ல. மற்ற நாட்டு வீரர்களை அணியில் சேர்க்க முடியாது. அதனால், உலகக் கோப்பைக்கான அணியில் 15-க்கும் அதிகமான வீரர்களை இடம்பெற அனுமதித்திருந்தால் அவர்களில் இருந்து வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.
இதையும் படிக்க: காஸாவில் பலியாகும் குழந்தைகள்...: இர்பான் பதான் உருக்கம்!
அகமதாபாத்தில் நாளை (நவம்பர் 4) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இந்தப் போட்டி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.