

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். குசல் பெரேரா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, பதும் நிசங்கா மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், இருவரும் தலா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பேட்டிங் செய்ய தாமதமாக வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தினை சந்திக்காமலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சரித் அசலங்கா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா இணை இலங்கை அணியின் ரன்களை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். தனஞ்ஜெயா டி சில்வா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 49.3 ஓவர்களில் இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் தன்சிம் ஹாசன் ஷகிப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹாசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.