உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இன்று மோதவுள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தை நேரில் காண, பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் அகமதாபாத் வருகின்றனா்.
இதுதவிர, இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டன்களான கபில் தேவ், எம்.எஸ்.தோனியுடன், சச்சின் டெண்டுல்கா் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனா்.
இதையும் படிக்க: மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடக்கம்
ஆட்டத்துக்கு முன்பாக இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியும், ஆட்டத்தின் இடையே பாலிவுட் பாடகா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.