உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி நேரில் வந்து ஆறுதல் கூறி வீரர்களுக்கு ஊக்கமளித்தது மிகப் பெரிய விஷயம் என இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண வந்த பிரதமர் நரேந்திர மோடி, இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க: இவரைப் போன்று பந்துவீசியவரை பார்த்ததே இல்லை: மார்னஸ் லபுஷேன்
இந்த நிலையில், உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி நேரில் வந்து ஆறுதல் கூறி வீரர்களுக்கு ஊக்கமளித்தது மிகப் பெரிய விஷயம் என இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நாங்கள் உடைமாற்றும் அறையில் அமர்ந்திருந்தோம். வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தார். அவர் வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, விளையாட்டுப் போட்டிகளில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் ஒட்டு மொத்த நாட்டையும் பெருமையடையச் செய்துள்ளீர்கள். இந்தத் தோல்வியை மறந்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் எனக் கூறினார்.
நாட்டின் மிகப் பெரியத் தலைவர் எங்களுக்காக நேரம் ஒதுக்கி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மிகப் பெரிய விஷயம். நாங்கள் பிரதமர் கூறியதை கவனமாக கேட்டுக் கொண்டோம். அவரது ஆலோசனைகளை பின்பற்ற நாங்கள் முயற்சி செய்வோம். அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஐசிசி கோப்பையை வெல்ல எங்களுக்கு மற்றொரு வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மோடி ஆறுதல்!(விடியோ)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.