டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங்கில் எந்த ஒரு பதற்றமுமின்றி செயல்படுவதுபோல இந்திய அணியை வழிநடத்துவதிலும் பதற்றமின்றி சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். அவர் வீரர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். வீரர்களுக்கு எல்லா விதத்திலும் அவர் ஆதரவளிக்கிறார். ஏதேனும் ஒரு விஷயம் தவறுதலாகப் போனால் அவர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தவறியதே இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு கூறுவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் விளையாடும் சக வீரரான சூர்யகுமார் யாதவும் அவரைப் போன்றே வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு அறிவுறுத்துகிறார் என்றார்.