பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட பேட்டில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர் அவரது சம்ளத்தில் 50 சதவிகித தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற போட்டியில் கராச்சி ஒயிட்ஸ் மற்றும் லாகூர் ப்ளூஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கராச்சி ஒயிட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆஸம் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு போட்டியின் சம்பளத் தொகையில் 50 சதவிகிதத்தை அபராதமாக விதிக்கப்பட்டது. பேட்டிங்கின்போது பாலஸ்தீனக் கொடி ஒட்டியிருந்த பேட்டில் அவர் பேட் செய்ததாகவும், கொடியை அகற்றிவிட்டு விளையாடக் கூறி கள நடுவர்கள் வலியுறுத்தியும் அவர் அவ்வாறு செய்யாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பும்ராவை விடுவிக்கிறதா மும்பை இண்டியன்ஸ்?
இந்த நிலையில், பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட பேட்டில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர் ஆஸம் கான் அவரது சம்ளத்தில் 50 சதவிகித தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆஸம் கானுக்கு கள நடுவர்களால் விதிக்கப்பட்ட 50 சதவிகித அபாரதத் தொகை குறித்த முடிவை பரிசீலனை செய்தோம். இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸம் கானுக்கு விதிக்கப்பட்ட அபாராதத் தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மீதமுள்ள போட்டிகளில் ஆஸம் கான் பாலஸ்தீன கொடி ஒட்டிய பேட்டில் தொடர்ந்து பேட் செய்வரா அல்லது சாதாரண பேட்டில் பேட் செய்வாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.