சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஷர்துல் தாக்குரையும், தமிழக வீரர் ஷாருக்கானையும் ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் டிச.19ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்த வீரர்கள், விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர்.
இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிடோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய வீரர்களான ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்துவீச்சாளர்கள் டுவைன் பிரிடோரியஸ், சிசண்டா மகாலா, பேட்டர் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
இந்த வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.32.1 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. இந்த தொகை மூலம் ஏலத்தில் குறைந்தது மூன்று வீரர்களை அதிக விலைக்கு எடுக்க சென்னை அணி முன்வரும்.
இதில், மொத்தம் 3 வெளிநாட்டு வீரர்களை சென்னை அணி தேர்வு செய்து கொள்ள முடியும் என்பதால் டிம் செளதி, ஜோ ரூட், பேட் கம்மின்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களில் ஒருவர் தேர்வு செய்ய சென்னை நிர்வாகம் கடுமையாக போட்டியிடும்.
அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சென்னை வீரர் ஷர்துல் தாக்குரை மீண்டும் அணியில் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும், கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தின் போது தமிழக வீரர் ஷாருக்கானை எடுக்க சென்னை அணி கடுமையாக கடைசி வரை போராடியது. அவரை தற்போது பஞ்சாப் அணி விடுவித்துள்ள நிலையில், மினி ஏலத்தில் அவரை எடுக்க சென்னை அணி நிர்வாகம் முனைப்பு காட்ட அதிக வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் யாரும் இல்லை என்ற குறையை தீர்க்கவும், அம்பத்தி ராயுடுவின் இடத்தை நிரப்பவும் ஷாருக்கானுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிகிறது.