உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நாளை (அக்டோபர் 14) நடைபெறும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் நாடுகள். உலகக் கோப்பை வரலாற்றில் 50 ஓவர் போட்டிகளில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதியுள்ளன. இந்த 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், நாளை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் 8-வது முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே தங்களது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் நாளை நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
50 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 7 முறை ( 1992,1996,1999, 2003,2011, 2015, 2019) மோதியுள்ளன. இந்த 7 முறையுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. நாளை அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று 8-வது வெற்றி என்று தனது சாதனையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் சந்திக்கும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களமிறங்கவுள்ளன.