இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூசிலாந்து 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். கான்வே 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். வில் யங் 17 ரன்களில் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்காக ரன்களைக் குவித்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். ரச்சின் ரவீந்திரா 87 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம் (5 ரன்கள்), மார்க் சாப்மேன் (6 ரன்கள்), கிளன் பிலிப்ஸ் (23 ரன்கள்), சாண்ட்னர் (1 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். அவர் 127 பந்துகளில் 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.