இந்த உலகக் கோப்பை வங்கதேசத்துக்கு மிகவும் மோசமான உலகக் கோப்பை என அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலிலும் 9-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் வங்கதேசம் தோல்வியடைந்தது. 230 ரன்கள் என்ற சிறிய இலக்கை துரத்திய வங்கதேசம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பை வங்கதேசத்துக்கு மிகவும் மோசமான உலகக் கோப்பை என அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த உலகக் கோப்பை வங்கதேசத்துக்கு மிகவும் மோசமான உலகக் கோப்பை என்பதை நீங்கள் உறுதியாக கூறலாம். அதனை நான் மறுக்க மாட்டேன். நாங்கள் ஏன் இவ்வாறு விளையாடுகிறோம் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. நாங்கள் ஃபீல்டிங்கில் சொதப்புகிறோம். எங்களது பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே எங்களால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை. பேட்டிங்கில் மிகுந்த கவனம் கொடுக்க வேண்டும். நெதர்லாந்துக்கு எதிரான தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனை ஜீரணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்றார்.