ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு புதிய இலக்கு ஒன்றை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நிர்ணயித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் தனது சிறப்பான வெற்றிகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது ஆப்கானிஸ்தான். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆப்கானிஸ்தான். அதன்பின் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி அசத்தியது. பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்துத் துறைகளிலுமே ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ஹசரங்கா அணியில் இல்லாதது சவாலாக உள்ளது: மஹீஸ் தீக்ஷனா
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு புதிய இலக்கு ஒன்றை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நிர்ணயித்துள்ளார். உலகக் கோப்பையில் மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சதமடிக்க வேண்டும் என்ற இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: இதுவரை ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகக் கோப்பையில் சதமடிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கான அடுத்த இலக்கு இதுதான். இந்த பொறுப்பினை ஆப்கானிஸ்தான் வீரர்களில் யாரேனும் ஒருவர் எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் நிலைத்து விளையாடி சதமடிக்க வேண்டும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் நிறைய சதங்கள் அடிக்கப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதுதான் உங்களுடைய அடுத்த இலக்கு. ஆப்கானிஸ்தான் வீரர்களால் எதிர்காலங்களில் சுலபமாக சதங்கள் அடிக்க முடியும் என எனக்குத் தெரியும். அடுத்தப் போட்டியிலிருந்தே அவர்களால் அந்த இலக்கை அடைய முடியும் என நம்புகிறேன் என்றார்.