தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர்ச்சியான இரு வெற்றிகளின் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிக்காவை 123 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான இந்த இரு வெற்றிகளால் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி மீண்டும் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா தவறவிட்ட சாதனை!
ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 120 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டின் இறுதியில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறிது பின்னடைவை சந்தித்தது. அதன்பின், மீண்டும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற நிலையிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற நிலையிலும் கைப்பற்றியது.
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பெற்ற தொடர்ச்சியான வெற்றிகளால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 12) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.