உலகக் கோப்பைகளை வெல்வது மற்றும் அனைத்து வடிவிலான கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம் பிடிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என அந்த அணியின் புதிய இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் புதிய இயக்குநராக ஓராண்டுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் புதிய இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதாவது: பாபர் அசாமின் கைகள் தான் என்னை அதிகம் கவர்ந்தது. அவர் பேட்டிங் செய்யும்போது கையினை வேகமாக நகர்த்துவது சிறப்பாக இருக்கும். அவரைப் போன்ற திறமை வாய்ந்தவரை நான் பார்த்ததில்லை. அவர் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவர் அணியில் முக்கிய வீரராக இருக்கப்போகிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவருக்கு சவாலான காரியங்களை கொடுக்க உள்ளேன். அவர் தனது ஆட்டத்தில் மிகச் சிறந்த வீரராக மாறுவார். கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியின் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமை குறித்து எனக்குத் தெரியும். அவர்கள் உலகக் கோப்பைகளை வெல்வது மற்றும் அனைத்து வடிவிலான கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம் பிடிக்கும் திறன் படைத்தவர்கள் என்றார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட அவரை நியமிக்க வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர் அதனை நிராகரித்தது பாகிஸ்தான் அணியின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.