இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜியோ சினிமாவில் ஆகாஸ்வானி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலரும் தங்களது பெயரை ஐபிஎல் ஏலத்துக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர் மிட்செல் ஸ்டார்க். புதிய பந்தில் அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறன் வாய்ந்தவர். கடந்த காலங்களில் அவர் பெங்களூரு அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்றார்.