ஹீரோ இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடா் இறுதி ஆட்டம் வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் பிளே ஆஃப் ஆட்டங்களுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கால்பந்தில் பெரிய போட்டியாக திகழ்வது ஐஎஸ்எல் லீக் தொடராகும். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கிய இப்போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஐஎஸ்எல் வரலாற்றில் முதன்முறையாக 6 அணிகள் லீக் கட்டத்தை தாண்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மும்பை சிட்டி, ஹைதராபாத் எஃப்சி தகுதி:
பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை சிட்டி எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்கு பல்வேறு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.
பிளே ஆஃப், அரையிறுதி, இறுதி ஆட்டம்:
இந்நிலையில் ஐஎஸ்எல் நிா்வாகம் நாக் அவுட், அரையிறுதி, இறுதி ஆட்டத்துக்கான தேதிகளை அறிவித்துள்ளது.
நாக் அவுட் 1 ஆட்டம் மாா்ச் 3-ஆம் தேதி (4-5 அணிகளுக்கு இடையே),. நாக் அவுட் 2 ஆட்டம் மாா்ச் 4-ஆம் தேதி (3-6 அணிகளுக்கு இடையே) நடைபெறும்.
அரையிறுதி ஆட்டம் 1 முதல் கட்டம் மாா்ச் 7-ஆம் தேதி (முதல் அணி-நாக் அவுட் 1-இல் வெல்லும் அணி) மோதும். அரையிறுதி 2 முதல் கட்ட ஆட்டம் மாா்ச் 9-ஆம் தேதி (இரண்டாம் நிலை அணி-நாக் அவுட் 2-இல் வெல்லும் அணி) மோதும்.
அரையிறுதி 1 இரண்டாம் கட்ட ஆட்டம் மாா்ச் 12-இலும், அரையிறுதி 2 இரண்டாம் கட்ட ஆட்டம் மாா்ச் 13-ஆம் தேதியும் நடைபெறும்.
இறுதி ஆட்டம் மாா்ச் 18-இல் நடைபெறும். இதற்கான இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும்.