
சா்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஐபிஏ) வெளியிட்ட உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீரா், வீராங்கனைகள் இணைந்து 36,300 ரேங்கிங் புள்ளிகளை ஈட்டியுள்ளனா். குத்துச்சண்டை வல்லரசு நாடுகளான அமெரிக்கா, கியூபாவை பின்னுக்கு தள்ளி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்தியா.
கஜகஸ்தான் 48,100, உஸ்பெகிஸ்தான் 37,600 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்திய குத்துச்சண்டை அணி உலக சாம்பியன்ஷிப், ஆசியப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் முதல் 5 இடங்களில் இடம் பெற்று வருகிறது. கடந்த 2 காமன்வெல்த் போட்டிகளில் மொத்தம் 16 பதக்கங்களை ஈட்டினா். கடந்த 2008 முதல் முதல்நிலை சா்வதேச போட்டிகளில் 140 பதக்கங்களை பெற்றுள்ளனா்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ)யும் பல்வேறு பெரிய போட்டிகளை நடத்தி வருகிறது. அதே நேரம், வரும் மாா்ச் 15 முதல் 26 வரை புது தில்லியில் மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. ஜூனியா், யூத் அளவிலும் இந்தியா முத்திரை பதித்துள்ளது. கடந்த 2 யூத் உலக சாம்பியன்ஷிப்பில் 22 பதக்கங்களை வென்றனா்.
இதுதொடா்பாக பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் கூறியதாவது:
முன்பு 44-ஆவது இடத்தில் இருந்தது இந்தியா. தற்போது கடும் உழைப்பு, சிறந்த வீரா், வீராங்கனைகளால் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். இது வரலாற்றில் சிறந்த மைல் கல்லாகும். குத்துச்சண்டையில் இந்தியா ஒரு வல்லரசு என்பதை ஆக்க பாடுபட்டு வருகிறோம். திட்டமிட்டு தேசிய, மாநில போட்டிகள் நடத்தப்பட்டு, வீரா், வீராங்கனைகளுக்கு தேவையான வெளிநாட்டு பயிற்சிகளும் தரப்படுகின்றன என்றாா் அஜய்சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.