இந்தியாவின் புதிய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரனேஷ் குறித்த ஆச்சர்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார் பிரபல பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ்.
இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ். ரில்டன் கோப்பை 2022-23 செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆல்சனை வீழ்த்தினார் காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ். இதையடுத்து தரவரிசையில் 2500 புள்ளிகளைப் பெற்று கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டர், பிரனேஷ். அதாவது இந்தியாவிலுள்ள 79 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றுவரை ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் நமக்குக் கிடைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரனேஷ் பற்றிய ஆச்சர்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
பிரனேஷ் குறித்த ஊக்கமூட்டும் விஷயம் என்னவென்றால், சர்வதேச செஸ் மாஸ்டர் ஆகும்வரை செஸ் போட்டிகளுக்குப் பயிற்சி எடுப்பதற்கான லேப்டாப் வசதி பிரனேஷிடம் கிடையாது. அனைத்து சிறுவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது - உங்களுக்கு எப்படிப்பட்ட தலைவிதி அமைந்தாலும் நம்பிக்கை இழக்க வேண்டாம். திறமை மீது நம்பிக்கை வையுங்கள். கடினமாக உழையுங்கள். அதே தலைவிதி உங்களுக்கு வெற்றிகளைக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவைக்கும் என்று கூறியுள்ளார்.