தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரேவிஸிடம் இருந்து பந்தினைப் பார்க்காமல் சிக்ஸர் அடிக்கும் திறன் வாய்ந்த ஷாட்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
டிவால்ட் பிரேவிஸின் ஷாட் அடிக்கும் திறமைகளைக் கண்டு வியப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுக் கொள்ளும்போது இதனை அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவராக சேதன் சர்மா மீண்டும் தேர்வு!
அந்த நிகழ்ச்சியில் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: நான் சில நேரங்களில் உங்களது ஷாட்களை விளையாட முயற்சி செய்வேன். நீங்கள் எனக்கு ஒன்றைக் கற்றுத் தர வேண்டும். நீங்கள் எப்படி பந்தினைப் பார்க்காமலேயே ஷாட்களை விளையாடுகிறீர்கள்? சிக்ஸரும் அடிக்கிறீர்கள். எனக்கு அதை நீங்கள் கற்றுத் தர வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த டிவால்ட் பிரேவிஸ் கூறியதாவது: உங்களுக்கு அந்த ஷாட்களைக் கற்றுக் கொடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். நானும் உங்களிடம் இருந்து சில ஷாட்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பந்தினைப் பார்க்காமல் அடிக்கும் ஷாட்கள் திட்டமிட்டு விளையாடுவது கிடையாது. அது தானாக வந்து விடுகிறது. எப்படி வருகிறது என்று எனக்கும் தெரியவில்லை என்றார்.
இதையும் படிக்க: இந்தியா தொடர்: பிரபல நியூசி. வீரர் விலகல்!
இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். தென்னாப்பிரிக்க வீரரான டிவால்ட் பிரேவிஸ் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டி20 போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.