மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டி, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களில் ஒருவரான பி.வி.சிந்து, கணுக்கால் காயத்துக்கான சிகிச்சைக்காக 5 மாதங்கள் ஓய்விலிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக இதில் களம் காண்கிறார்.
முதல் ஆட்டமே அவருக்கு சவாலாக அமையும் வகையில், முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை அவர் சந்திக்கிறார். இந்தியாவின் சாய்னா நெவால் - சீனாவின் ஹான் யுவையும், ஆகர்ஷி காஷ்யப் - சீன தைபேவின் சு வென் சியையும், மாளவிகா பன்சோத் - தென் கொரியாவின் ஆன் சி யங்கையும் சந்திக்கின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் - சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணாயை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் - ஜப்பானின் கென்டோ நிஷிமோடோவுடன் மோதுகிறார்.
ஆடவர் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி கூட்டணி - தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வான் ஹோ ஜோடியை சந்திக்கிறார். மகளிர் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை - ஹாங்காங்கின் யுங் கா டிங்/யுக் புய் லாம் இணையுடன் மோதுகிறது. அஸ்வினி பட்/ஷிகா கெüதம் ஜோடி - தாய்லாந்தின் சுபிசரா பேவ்சம்பிரான்/புடிட்டா சுபாஜிரகுல் கூட்டணியை எதிர்கொள்கின்றனர்.
கலப்பு இரட்டையரில் இஷான் பட்நாகர்/தனிஷா கிராஸ்டோ - நெதர்லாந்தின் ராபின் டபேலிங்/செலினா பீக் ஜோடியுடன் விளையாடுகின்றனர்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மே மாதம் முதல் தொடங்கும் நிலையில், இந்த காலண்டரில் வரும் போட்டிகள் யாவும் இந்தியர்களுக்கு முக்கியமானவையாகும்.