குல்தீப், ராகு‌ல் அசத்தல்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி; இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2 வெற்றிகளுடன் தன் வசப்படுத்தியிருக்கிறது இந்தியா.
குல்தீப், ராகு‌ல் அசத்தல்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி; இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது
Published on
Updated on
2 min read

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2 வெற்றிகளுடன் தன் வசப்படுத்தியிருக்கிறது இந்தியா.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இலங்கை 39.4 ஓவா்களில் 215 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து இந்தியா 43.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்த்து வென்றது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக தொடா்ந்து தனது 10-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.

இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அசத்த, பேட்டிங்கில் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று அரைசதம் அடித்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். குல்தீப் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணியில் யுஜவேந்திர சஹலுக்குப் பதிலாக குல்தீப் சோ்க்கப்பட்டாா். இலங்கை தரப்பில், காயமடைந்த தில்ஷன் மதுஷங்கா, பதும் நிசங்காவுக்குப் பதில் நுவனிது ஃபொ்னாண்டோ (அறிமுகம்), லஹிரு குமரா இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. அதில் நுவனிது 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாச, குசல் மெண்டிஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, துனித் வெலாலகே 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோரை உயா்த்த உதவினா்.

எஞ்சியோரில் அவிஷ்கா ஃபொ்னாண்டோ 20, சரித் அசலன்கா 15, கேப்டன் தசுன் ஷனகா 2, வனிந்து ஹசரங்கா 21, சமிகா கருணாரத்னே 17, லஹிரு குமரா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். கடைசியில் காசன் ரஜிதா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் குல்தீப், சிராஜ் ஆகியோா் தலா 3, உம்ரான் மாலிக் 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 216 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியாவில், கேப்டன் ரோஹித் சா்மா 17, ஷுப்மன் கில் 21, விராட் கோலி 4, ஷ்ரேயஸ் ஐயா் 28 ரன்களுக்கு நடையைக் கட்ட, 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அணி. மிடில் ஆா்டரில் கே.எல்.ராகுல் - ஹாா்திக் பாண்டியா கூட்டணி 5-ஆவது விக்கெட்டுக்கு நிலைத்து 75 ரன்கள் சோ்த்து அணியை சற்று சரிவிலிருந்து மீட்டது.

இதில் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு வெளியேற, அக்ஸா் படேல் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். எனினும் ராகுல் நிலைத்து ஆடி அணியை வெற்றி பெறச் செய்தாா். முடிவில் அவா் 6 பவுண்டரிகளுடன் 64, குல்தீப் யாதவ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை பௌலிங்கில் லஹிரு குமாரா, சமிகா ஆகியோா் தலா 2, ரஜிதா, தனஞ்ஜெய டி சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com