
விராட் கோலி சரியாக விளையாடாதபோது அவரை விமர்சித்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார் பிரபல தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி.
வருடக் கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தார் விராட் கோலி. இதற்கடுத்து விளையாடிய இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு சதங்கள் என சமீபகாலமாக 4 ஒருநாள் ஆட்டங்களில் 3 சதங்களை அடித்துள்ளார்.
2022-ல் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்தார் விராட் கோலி. ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. கடந்த 2014 முதல் 2019 வரை ஒரு வருடம் தவிர அனைத்து வருடங்களிலும் குறைந்தது 7 சதங்கள் எடுத்தவர் கோலி. ஆனால் 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. 2022-ல் இரு சதங்களை எடுத்தார். 2023 தொடங்கி 15 நாள்களுக்குள் மேலும் 2 சதங்களை அடித்துவிட்டார். இதுவரை 73 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.
2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்தச் சதம் எப்போது என்று ரசிகர்கள் 1000 நாள்களுக்கும் அதிகமாகக் காத்திருந்தபோது தான் ஆசியக் கோப்பையில் மீண்டும் சதமடித்து ஆறுதல் அளித்தார். இரண்டரை ஆண்டுகளாகச் சதம் எதுவும் எடுக்காமல் மோசமாக விளையாடி வந்தபோது விராட் கோலியை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் பிரபல தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி, கோலிக்கு ஆதரவாக ட்விட்டரில் கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு, கோலியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலர் விமர்சித்து அவரைப் பற்றி மோசமாகப் பேசவில்லையா? அவர்கள் எல்லோரும் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.