இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்திய அணியின் முக்கிய பேட்டரான ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர் போட்டியிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்று தெரிவித்தார்.
மேலும், ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் முதல் இடத்திற்கு முன்னேறும்.
ஏற்கெனவே டி20 தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது.