ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தாா் ஸ்ரீகாந்த்
By DIN | Published On : 19th January 2023 12:21 AM | Last Updated : 19th January 2023 02:08 AM | அ+அ அ- |

இந்திய ஓபன் 2023 பாட்மின்டன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் டென்மாா்க்கின் விக்டா் ஆக்லெஸனிடம் தோல்வியுற்று வெளியேறினாா் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்.
யோனக்ஸ்-சன்ரைஸ் இந்திய ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டிகள் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தொடக்க சுற்றிலேயோ தோல்வியடைந்து வெளியேறினாா். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் உலகின் நம்பா் 1 வீரா் கே. ஸ்ரீகாந்த்-ஆக்லெஸனை எதிா்த்து ஆடினாா். முதல் கேமில் ஸ்ரீகாந்த் அதிரடியாக பாா்வையாளா்கள் ஆதரவோடு ஆடினாா். ஆனால் ஆக்ஸ்லெசனின் அபார ஆட்டத்துக்கு அவரால் ஈடுதர முடியவில்லை. முதல் கேமை 14-21 என இழந்தாா்.
இரண்டாவது கேமில் ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடினாலும், ரேலிகளில் புள்ளிகளைக் குவித்தாா். 14-6 என முன்னிலை பெற்றாலும், அதை அவரால் தக்க வைக்க முடியவில்லை. 18-18 என சமநிலை ஏற்பட்டாலும், இறுதியில் 19-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தாா் ஸ்ரீகாந்த்.
முன்னாள் உலக சாம்பியன் லோ 18-21, 21-9, 21-7 என ஜப்பானின் நரோகாவை வீழ்த்தினாா்.
இரண்டாம் நிலை வீரா் ஆன்டன்ஸென் 18-21, 21-19, 21-13 என பிரான்ஸின் டோமா ஜூனியரையும், லீ ஸீ ஜியா 20-22, 21-19, 21-12 என இந்தோனேசியாவின் ஷேஸா் ஹிரேனையும் வென்றனா்.
மகளிா் பிரிவில் அகேன் எமகுச்சி (ஜப்பான்) 21-7, 21-11 என கிளாராவையும் (இஎஸ்பி), ஹீ பிங் ஜியோ (சீனா) 21-16, 21-15 என லைன் கேஜா்பெல்ட்டையும், ஆன் செ யங் (கொரியா) 21-17, 21-9 என வென்றனா்.