மகளிர் முத்தரப்பு டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
தென்னாப்பிரிக்காவில் கிழக்கு லண்டனில் தென்னாப்பிரிக்கா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதின. இந்திய வீராங்கனைகளான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ஷிகா பாண்டே, ரேணுகா சிங், பூஜா உள்பட ஆறு பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
டாஸ் வென்ற தெ.ஆ. அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் யாஷ்திகா 35 ரன்களும் தீப்தி சர்மா 33 ரன்களும் அமன்ஜோத் கெளர் 41 ரன்களும் எடுத்தார்கள்.
ஐந்து ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த தெ.ஆ. மகளிர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.