

தென் கொரியாவில் நடைபெற்ற ஆடவருக்கான 9-ஆவது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிக்கிழமை வாகை சூடிய இந்தியா, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
இத்துடன் 9 சீசன்களில், இந்தியாவே 8 முறை சாம்பியன் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2003-இல் மட்டும் ஈரான் கோப்பை வென்றிருந்தது.
இந்த முறை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை அதிரடியாக சாய்த்தது. அந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஈரான் ஆக்ரோஷம் காட்டினாலும் இந்தியா அதற்குத் தகுந்த பதிலடியை அளித்து வந்தது. அணியின் கேப்டன் பவன் ஷெராவத் 2 தொடு புள்ளிகளுடன் ஈரானை ஆல்-அவுட் செய்து 10-4 என இந்தியாவை முன்னிலைப்படுத்தினாா்.
மேலும் ஒரு ஆல்-அவுட் செய்த இந்தியா, பாதி நேர முடிவில் 23-11 என முன்னிலையை தொடா்ந்து தக்கவைத்திருந்தது. ஈரானை மீட்டெடுக்கும் அந்த அணி ஆல்-ரவுண்டா் முகமதுரெஸா சியானேவின் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போக, ஈரான் 3-ஆவது முறையாக ஆல்-அவுட் ஆனது. இந்தியாவின் முன்னிலை 33-14 என உயா்ந்தது.
அதை கடைசிவரை தக்கவைத்த இந்தியா, இறுதியில் 42-32 என வெற்றி பெற்று வாகை சூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.