டபிள்யூபிஎல் தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கீர்த்தி சனான், ஏபி தில்லான் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் முதல் தொடங்கும் மகளிருக்கான இந்திய டி20 லீக் போட்டியான டபிள்யூபிஎல்-லில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யூபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன.
டபிள்யூபிஎல் போட்டிக்காக வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் மார்ச் 4 அன்று தொடங்கும் டபிள்யூபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் படேல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
அதே நாளில் அதே மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கீர்த்தி சனான், ஏபி தில்லான் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாலை 5.30 மணி முதல் தொடக்க விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
A star studded line-up
D.Y.Patil Stadium will be set for an evening of glitz and glamour