ஐபிஎல் 2022 ஏலத்துக்கு முன்பு ஆர்சிபி அணியில் தன்னைத் தக்கவைத்தது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் கிளென் மேக்ஸ்வெல்.
ஐபிஎல் 2022 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. அதற்கு முன்பு மெகா ஏலம் நடைபெற்றது. சில வீரர்களை அணிகள் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, விராட் கோலி (ரூ. 15 கோடி), மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), சிராக் (ரூ. 7 கோடி) ஆகிய மூவரையும் தக்கவைத்துக் கொண்டது ஆர்சிபி அணி.
இந்நிலையில் ஆர்சிபி அணி ஏலத்துக்கு முன்பு தன்னைத் தக்கவைத்துக் கொண்டது பற்றி மேக்ஸ்வெல் கூறியதாவது:
பெரிய ஏலம் என்பதால் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. எத்தனை பேரைத் தக்கவைக்கப் போகிறார்கள் என்பதும். சிராஜ், ஹர்ஷல், சஹால், ஏபி டி வில்லியர்ஸ், கோலி, இந்திய இளம் வீரர்கள் எனப் பலரைத் தக்கவைக்க வாய்ப்பிருந்தது. எனவே ஒரு வெளிநாட்டு பேட்டரைத் தக்கவைப்பது சரியான முடிவாக இருக்காது. இதுதான் நிலைமை. ஆனால் என் மண்டைக்குள் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது (ஆர்சிபி இயக்குநர் மைக் ஹெசனிடமிருந்து) நான் தக்கவைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. உடனே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் 15 ஆட்டங்களில் 513 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். ஐபிஎல் 2022 போட்டியில் 13 ஆட்டங்களில் 301 ரன்கள் எடுத்தார்.