பெங்களூரு அணியின் விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 7,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தியத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. விராட் கோலி 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றையப் போட்டியில் 19 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி புதிய சாதனை ஓன்றை படைத்தார். ஐபிஎல் தொடரில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேபோல தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் அவர் 1000 ரன்களுக்கும் மேலாக குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது 7,043 ரன்களுடன் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 6,536 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், 6,211 ரன்களுடன் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 419 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். நேற்று அவர் அடித்த அரைசதம் இந்த சீசனில் அவர் அடித்த 6-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.