எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு இருப்பேன் என்று கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடர் முழுவதும் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நோக்கில் ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி எதிர் அணியின் வீரர்கள் பலரும் சென்னை அணியுடனான ஆட்டம் முடிவடைந்த பிறகு தோனியை சந்தித்து அவர்களின் சட்டை, பேட் உள்ளிட்டவற்றில் தோனியின் ஆட்டோகிராஃப் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டிக்கு பிறகு தோனி பேசுகையில், ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா என்பது குறுத்து இதுவரை முடிவெடுக்கவில்லை. அதற்கு இன்னும் 8, 9 மாதங்கள் உள்ளன. டிசம்பர் மாதம்தான் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. அதைப் பற்றி இப்போதே யோசித்து ஏன் தலைவலி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்ல களத்திற்கு வெளியே ஏதேனும் பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சென்னை அணியோடு இருபேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கேப்டன் தோனியின் இந்த பதிலால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.