அனுபவமிக்க சிறந்த வீரர்களின் வழிகாட்டுதலில் விளையாடுவது குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த உதவியாக இருக்குமென ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் குஜராத் அணியின் கேப்டனாக அண்மையில் நியமிக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, தான் அங்கம் வகித்த முந்தைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவதாக முடிவெடுத்த நிலையில், குஜராத் அணி நிர்வாகம் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது. கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியையும் ஷுப்மன் கில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிக்க: பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை!
இந்த நிலையில், அனுபவமிக்க சிறந்த வீரர்களின் வழிகாட்டுதலில் விளையாடுவது குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த உதவியாக இருக்குமென ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருவருக்கு கேப்டன் பதவி என்பது பல விஷயங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்படுகிறது. ஈடுபாடு என்பதும் அதில் அடங்கும். அதேபோல, ஒழுக்கம், கடின உழைப்பு, விசுவாசம் போன்றவற்றை வைத்தும் ஒருவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படும். நான் சிறந்த வீரர்களின் வழிநடத்துதலின் கீழ் விளையாடியுள்ளேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டும் இருக்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலில் விளையாடிய அனுபவம் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்த உதவியாக இருக்கும்.
இதையும் படிக்க: இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீட்டிப்பு!
குஜராத் அணியில் கேன் வில்லியம்சன், ரஷித் கான், முகமது ஷமி, டேவிட் மில்லர் மற்றும் விருத்திமான் சஹா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருக்கிறார்கள். வருகிற ஐபிஎல் சீசன் சிறப்பானதாக இருக்கப் போகிறது. கேப்டனாக நானும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். ஐபிஎல் தொடர் முதன்முதலாக தொடங்கப்பட்டபோது 7 அல்லது 8 வயது சிறுவனாக இருந்தேன். கிரிக்கெட்டை நேசித்து விளையாடும் அனைவருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும், ஒரு அணியை வழிநடத்த வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த கனவு தற்போது நிஜமாகியுள்ளது என்றார்.