ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1000 ரன்களைக் கடந்துள்ளார்.
உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியின்போது அவர் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். உலகக் கோப்பையில் நேற்றையப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின்போது இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களையும் கடந்தார். இந்த ஆண்டில் ரோஹித் சர்மா 1056 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கு முன்னதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் இலங்கையின் பதும் நிசங்கா இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை ஏற்கனவே கடந்தனர்.
5-வது முறை
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5-வது முறையாக ஓர் ஆண்டு ஒன்றில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்னதாக அவர் கடந்த 2013, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.
100-வது போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டி இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விளையாடிய 100-வது போட்டியாகும். கேப்டனாக அவரது இந்த 100-வது போட்டியில் சர்வதேசப் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.