இராக்கிடம் போராடித் தோற்றது இந்தியா
By DIN | Published On : 08th September 2023 12:27 AM | Last Updated : 08th September 2023 12:27 AM | அ+அ அ- |

தோற்ற விரக்தியில் இந்திய அணியினா்.
தாய்லாந்தில் நடைபெற்று வரும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த இராக்கிடம் 5-4 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் போராடித் தோற்றது இந்தியா.
லெபனான், தாய்லாந்து, இராக், இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கும் கிங்ஸ்கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பலம் வாய்ந்த இராக்குடன் மோதியது இந்தியா. நட்சத்திர வீரரும், கேப்டனுமான சுனில் சேத்ரி இல்லாத நிலையில் இந்திய அணி ஆடியது.
இருமுறை இந்திய அணி முன்னிலை பெற்ற போதிலும், இராக் அணி ஸ்பாட் கிக் மூலம் இரண்டு முறையும் சமநிலை ஏற்படுத்தியது.
16-ஆவது நிமிஷத்தில் இந்திய வீரா் மகேஷ் முதல் கோலடித்தாா். எனினும் அடுத்த 23-ஆவது நிமிஷத்தில் இராக் வீரா் கரீம் பதில் கோலடிக்க முதல் பாதி முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இரண்டாவது பாதியில் 51-ஆவது நிமிஷத்தில் இந்திய வீரா் மான்வீா் அனுப்பிய பந்தை ஆகாஷ் அடிக்க 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது. வெற்றி பெறும் விடும் எனக் கருதப்பட்ட நிலையில், 80-ஆவது நிமிஷத்தில் இந்திய வீர்ர சந்தேஷ் ஜிங்கன் பௌலால் இராக் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு தரப்பட்டது. அதை பிசகின்றி கோலாக்கினாா் ஆமென் காத்பன். இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.
கூடுதல் ஆட்ட நேரத்திலும் இரு அணிகளால் கோலடிக்க முடியவில்லை.
பெனால்டி ஷூட் அவுட்
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இராக் தரப்பில் சாலிஹ், அலி காதிம், காத்பன், அன்வா் அலி, அமின் அல்ஹாமவி, பொன்யன் ஆகியோா் கோலடித்தனா். இந்திய தரப்பில் குா்ப்ரீத், சுரேஷ், ஜிங்கன், ரஹீம் அலி ஆகியோா் கோலடித்தனா்.
இறுதியில் 5-4 என வென்றது இராக்.
தரவரிசையில் முன்னிலையில் உள்ள இராக் அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது இந்தியா.