இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் ரிஹான் அகமது தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளின் சுழற்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு இங்கிலாந்து அணியில் நிலவிய சூழலும், பென் ஸ்டோக்சின் சிறப்பான வழிநடத்துதலுமே காரணம் என ரிஹான் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் அதிக அனுபவமற்ற இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது எந்த அளவுக்கு அணியின் சூழல் சிறப்பாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. டாம் ஹார்ட்லி மற்றும் சோயிப் பஷீர் போட்டியின்போது கொஞ்சம் கூட பதற்றமாக இல்லை. அதற்கு காரணம் அணியில் நிலவும் சிறப்பான சூழலே. அதேபோல அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது சிறப்பான வழிகாட்டுதலில் விளையாடும்போது எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை.
இதையும் படிக்க: பழைய நண்பரை மறக்காத தோனி: வைரலாகும் புகைப்படம்!
ஆட்டம் எவ்வளவு மோசமாக சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து எப்படி சிறப்பான விஷயத்தைக் கொண்டுவர முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் இருவருமே கூறுவர். 4 மோசமான பந்துகளை வீசிவிட்டு ஒரு விக்கெட் எடுப்பது, தொடர்ச்சியாக ரன்களே கொடுக்காமல் 16 பந்துகள் வீசுவதைக் காட்டிலும் மேலானது என்றார்.