இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய விராட் கோலி அதன்பின் முதல் முறையாக கிரிக்கெட் தொடர்பான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், இளம் இந்திய அணி தங்களது உறுதியான ஆட்டத்தால் டெஸ்ட் தொடரை வென்றுள்ளதாக இந்திய அணியின் விராட் கோலி இந்திய அணியைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இளம் இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உறுதியான ஆட்டம், தோல்வியிலிருந்து மீண்டு வரும் பண்பு ஆகியவை இந்திய அணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.