இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது மிகுந்த சவாலனதாக இருந்ததாக இந்திய பந்துவீச்சாளர்களை பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது மிகுந்த சவாலனதாக இருந்ததாக இந்திய பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் எனவும், ஒவ்வொரு தொடரையும் கைப்பற்ற வேண்டும் எனவும் நினைக்கிறோம். முதல் முறையாக நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். அடுத்தடுத்து நிறைய தொடர்களில் விளையாடவுள்ளோம். தோல்வியடைந்த அணியாக இருப்பது எப்போதுமே ஏமாற்றத்தை கொடுக்கக் கூடியது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.
அஸ்வின், ஜடேஜா, குல்தீப் மற்றும் இங்குள்ள சூழல் என அனைத்துமே எங்களுக்கு மிகவும் சவாலளிக்கும் விதமாக இருந்தது. இந்திய அணிக்கு ஆடுகளங்களின் தன்மை குறித்து நன்கு தெரிந்திருக்கும்போது அவர்களுக்கு எதிராக ரன் குவிப்பது மட்டுமின்றி அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்வதே சவாலானதாக இருந்தது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான சோயிப் பஷீர் மற்றும் டாம் ஹார்ட்லியும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர் என்றார்.
4-வது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.