மகேந்திர சிங் தோனி இன்னும் 2 அல்லது 3 ஐபிஎல் சீசன்களில் விளையாடலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த சீசன் கோப்பையை வென்ற தோனி, உடல்நிலை ஒத்துழைத்தால் அடுத்தாண்டும் சென்னை அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், இன்னும் 2 அல்லது 3 சீசன்களில் அவர் விளையாடலாம் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
மேலும், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தீபக் அளித்த பேட்டியில்,
“தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் இல்லாமல் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும் தோனி இருக்கும் சிஎஸ்கே அணியைதான் பார்த்திருக்கிறார்கள்.
தோனியுடன் நெருங்கிப் பழக 2-3 ஆண்டுகள் ஆனது, நான் அவரை எனது மூத்த சகோதரராக பார்க்கிறேன், அவரும் என்னை ஒரு தம்பியாக பார்ப்பதாக நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.