இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளனர். அவர்களை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சௌரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிக்காக முதல் முறையாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணி விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சௌரப் குமார்.