டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது குறித்து தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் நிறைவடந்த நிலையில், இந்திய அணி 255 ரன்கள் என்ற முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. ரஜத் படிதாருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் தேவ்தத் படிக்கல்.
அறிமுக வீரராக களமிறங்கிய அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது குறித்து படிக்கல் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவற்கு முதல் நாள் இரவே நான் இந்திய அணியில் விளையாடவுள்ளேன் எனத் தெரிந்தது. நாளை நடைபெறும் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருங்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. நான் பதற்றமாக இருந்தேன். அன்று இரவு தூங்குவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அதே நேரத்தில் மனதுக்குள் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றார்.