வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னெளவில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி, லக்னெள சூப்பர் கெயிண்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதனைத் தொடர்ந்து, வருகின்ற சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை பிற்பகலில் கொல்கத்தாவுக்கு தனி விமானம் மூலம் வீரர்கள் புறப்பட்டனர்.
ஆனால், கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், வீரர்கள் சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு குவாஹத்தி விமான நிலையத்துக்கு திருப்பிவிட்டனர்.
குவாஹத்தியில் நீண்ட நேரம் காத்திருந்த கொல்கத்தா அணி வீரர்கள் சென்ற விமானம் மீண்டும் நள்ளிரவில் கொல்கத்தா சென்று தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டு லக்னெள விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, லக்னெளவுக்கு மீண்டும் சென்ற வீரர்கள், வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
கொல்கத்தா அணி வீரர்கள் வாரணாசியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதற்கிடையே, கொல்கத்தா அணி வீரர்கள் இன்று பிற்பகல் மீண்டும் கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.