
கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாட முடியாமல் இருந்தது தினம் தினம் மனப் போராட்டமாக இருந்ததாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
26 வயதாகும் கலீல் அகமது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கலீல் அகமது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட முடியாமல் இருந்த ஒவ்வொரு நாளும் மனப் போராட்டமாக இருந்ததாக கலீல் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தில்லி கேப்பிடல்ஸின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலீல் அகமது பேசியதாவது: கடந்த சில மாதங்களாக நடந்த விஷயங்களும், இந்த ஐபிஎல் தொடர் தொடங்கிய விதமும் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வை எனக்குக் கொடுத்தது. ஐபிஎல் போட்டிகள் செல்ல செல்ல எனது நம்பிக்கை மேலும் வளர்ந்தது. நான் நன்றாக பந்துவீசுவதை உணர்ந்தேன். எனது பெயர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இதனை எனக்கு கிடைத்த முன்னேற்றமாக நினைக்கிறேன்.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடாததை நினைத்து வருந்துகிறேன். ஒவ்வொரு நாளும் நாட்டுக்காக விளையாட முடியவில்லை என்பது என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை இந்திய அணி விளையாடும் போதும், நான் அணியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என யோசித்து பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் எனக்குப் போராட்டமாகவே இருந்தது என்றார்.
கலீல் அகமது இந்திய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளிலும், 14 டி20 போட்டிகளிலும் விளையாடி முறையே 15 மற்றும் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நாக்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.